‘க்கு’ வைத்து பேசிய டிடிவி தினகரன்.. டெல்லியில் கூட்டணி பேச்சு நடக்குதா? அப்போ கன்ஃபார்மா?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கூட்டணி குறித்த கேள்விக்கு பரபர பதிலை அளித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். பாஜக மேலிடத்துடன் தினகரன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைத் தொடர்ந்து, பாஜக அமைக்கப்போகும் புது கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை பாஜக தேசிய தலைமை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரனும், கோவையில் செயல்வீரர்கள் கூட்டம், திருச்சியில் மா.செக்கள் கூட்டம் என கட்சிப் பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று, "எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எழுச்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாவோம்" என்று தினகரன் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், "உரிய காலம் வரும்போது, அமமுக கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும். தொடர்ந்து தேர்தலை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருச்சியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே அமமுகவை கூட்டணியில் இணைக்க விரும்பியது பாஜக தேசிய தலைமை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு முட்டுக்கட்டை போட்டார். பின்னர் தேர்தல் முடிவுகளில் அமமுக தனித்துப் போட்டியிட்டது, அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியை பல தொகுதிகளில் பாதித்ததை பாஜக உணர்ந்தது.
அதன் அடிப்படையிலேயே இனியாவது அமமுகவை சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்தது பாஜக. இந்நிலையில், கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருப்பதால், தற்போது அமமுகவை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறதாம் பாஜக. இப்போது தினகரன் பேச்சின் மூலம் மூலம் பாஜக கூட்டணியில் அமமுக இணைவது உறுதியாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications