முதல்வர் வேட்பாளர் யார்? கடைசி வரை எடப்பாடி பெயரை கூட சொல்லாத டிடிவி தினகரன்.. முதல் நாளே இப்படியா!
சென்னை: என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் மீண்டும் இணைந்தது எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தோஷம் அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதேபோல் 2021ஆம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இம்முறை அமைத்தே தீருவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் டிடிவி தினகரன் தவிர்த்து நகர்ந்து சென்றார்.
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்திருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சென்று டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்பின் பியூஷ் கோயல் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பியூஷ் கோயல் பேசுகையில், 2004ஆம் ஆண்டு டிடிவி தினகரன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதே, எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்பி இருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சந்தோஷம்.
ஒரு குடும்பமாக இணைந்து திமுகவின் குடும்ப மற்றும் ஊழல் ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவோம். என்டிஏ கூட்டணி அரசு மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்கும். தமிழின் பெருமையை காப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி முனைப்புடன் செயல்படும் என்று தெரிவித்தார். இதன்பின் டிடிவி தினகரன் பேசுகையில், எங்களின் பங்காளி சண்டையை ஓரமாக வைத்துவிட்டோம்.
அதனை எல்லாவற்றையும் மறந்துவிட்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தமிழக மக்கள் நலனுக்காக முழு மனதுடன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம். நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சியில் அமமுக பங்கேற்கும். இந்த கூட்டணியை பலப்படுத்த அமமுக உறுதுணையாக இருக்கும். அதற்காக அமமுக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அமைக்கத் தவறிய ஜெயலலிதாவின் ஆட்சியை இம்முறை அமைத்தே தீருவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா? முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறி நகர்ந்து சென்றார். அவார் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் மவுனம் காத்தது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications