அசைண்மெண்ட் என்னாச்சு?.. கேள்வி கேட்ட டிடிவி.. இபிஎஸ்ஸை சாந்தப்படுத்திய ஜெயக்குமார்.. என்ன நடந்தது?
சென்னை: சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பிறந்த நாளின் போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 13ம் தேதி தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க அமமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
தமிழ்நாடு முழுக்க இவரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் வாழ்த்து
இந்த நிலையில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரின் தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் சென்றது. முக்கியமாக திமுக தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் போயிருக்கிறது. சில முக்கிய திமுக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவிலிருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது தம்பி ஓ.பி.ராஜா இருவரும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியதாக கூறப்படுகிறது.
கண்டிப்பு
இதுதான் அதிமுகவின் மற்ற தலைகளுக்கு தெரிந்து தற்போது அது விவாதம் ஆகி இருக்கிறதாம். சசிகலா-தினகரன் தரப்போடு நெருக்கம் பாராட்டக் கூடாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தொடங்கி அதிமுகவின் சீனியர் தலைவர்கள் பலரும் ஓபிஎஸ்சிடம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்கள். ஓபிஎஸ்சும் அதனை ஆமோதித்திருந்தார்.
நெருக்கம் வேண்டாம்
வெளிப்படையாக ஓபிஎஸ் எங்கும் சசிகலா தரப்போடு நெருக்கம் காட்டவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில்., , தற்போது தினகரனுக்கு ரகசியமாக வாழ்த்து சொல்லி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி எடப்பாடிக்கும் சீனியர்களுக்கும் தெரிந்து ஓபிஎஸ் மீது கோபப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வருகின்றன. ஏன் அவர் வாழ்த்து சொன்னார் என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
எடப்பாடி என்ன சொன்னார்?
ஓபிஎஸ்சிடம் இதனை நான் கேட்கிறேன் என எடப்பாடியிடம் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறாராம். அதற்கு ஜெயக்குமாரோ, அதெல்லாம் வேண்டாம் .. விட்டுடுங்க.. தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என சொல்லுவார்களில்லையா அது போல என்னதான் இருந்தாலும் சில விசயங்களை அவரால் மாத்திக்க முடியாது என சொல்லி தடுத்து விட்டாராம் எடப்பாடி. இதை பெரிது படுத்த வேண்டாம் என்று ஜெயக்குமார் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
அசைண்மெண்ட்டை முடித்து விட்டீர்களா?
அதிமுக வட்டாரத்தில் இது பேச்சாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தினகரனுக்கு ஓபிஎஸ் வாழ்த்திய பின் ஓ.பி ராஜாவும் வாழ்த்து தெரிவித்தாராம். தினகரனுக்கு வாழ்த்து சொன்ன ஓ.பி.ராஜாவிடம், ஏற்கனவே உங்களிடம் சொன்ன அசைண்மெண்ட்டை முடித்து விட்டீர்களா? என தினகரன் கேட்டதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு ஓ.பி ராஜாவோ, இப்போதுதான் பாதி கிணறு தாண்டியிருக்கேன். அதிலும் நிறைய சறுக்கல் இருக்கு. முழுமையா முடிச்சிட்டு சொல்றேன் என்று சொல்லியிருக்கிறாராம் ஓ.பி.ராஜா.
என்ன பிளான்
இது எல்லாம் அதிமுக, அமமுக தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் சொன்ன தகவல்கள். அதன்படின் தென் மாவட்டங்களில் அதிமுகவில் உள்ள குறிப்பிட்ட சில சமூக நிர்வாகிகளை சசிகலாவுக்கு ஆதரவாக இழுக்கும் அசைண்மெண்ட்தான் தினகரன் ராஜாவிற்கு கொடுத்திருந்தாராம் என்கிறது நம்பிக்கைக்குரிய வட்டாரம். இதனால் வரும் நாட்களில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.