சார்... அமமுக - தேமுதிக கைகோர்க்குமா... இதுக்கு தினகரன் சொன்ன நச் பதில் இதுதான்!
சென்னை: மார்ச் 12-ம் தேதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதனை தொடர்ந்து அடுத்தக் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
வீடுதோறும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் தேர்தல் அறிக்கையின் பிரதான அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் களம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பை காட்டி வருகின்றன. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று பல்வேறு யூகங்கள் வெடித்தன. ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் தானே விடை கொடுத்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அவர் அதிமுகவுடன் இணைவாரா? என்று கேள்விகள் எழுந்த நிலையில் கட்சியின் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன். இந்த நிலையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று நிருபர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தினகரன் கூறியதாவது:- மார்ச் 12-ம் தேதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதனை தொடர்ந்து அடுத்தக் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தால் கண்டிப்பாக அறிவிப்போம். தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை ஏமாற்றும் திட்டங்கள் இருந்தால் மக்கள் கண்டிப்பாக வாக்களிக்க மாட்டார்கள். வீடுதோறும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் தேர்தல் அறிக்கையின் பிரதான அம்சமாக இருக்கும் என்று டிடிவி தினகரன் கூறினார்.