"என் ஆதரவு தவெகவுக்கு தான்".. காமராஜ் கறார்.. தினகரனுக்கு கூல் ரிப்ளை!
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். தவெகவுக்கு பல்வேறு கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறார்கள். அமமுக எம்எல்ஏ காமராஜ் ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, பிறகு பின்வாங்கிவிட்டார். இந்நிலையில் சட்டமன்றத்தில் தவெகக்கு ஆதரவளிப்பதாக காமராஜ் அறிவித்தார். அதிர்ச்சியடைந்த தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். தினகரனின் நடவடிக்கை குறித்து காமராஜ் அதிரடி பதில் ஒன்றை அளித்திருப்பது அமமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், "முதலமைச்சர் இளைஞராக இருப்பதால் நல்ல ஆட்சியை வழங்குவார் என்று நம்புகிறேன். சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அது அப்போதைய அரசியல் சூழல். இன்றைக்கு முதலமைச்சரால் மட்டுமே திறம்பட ஆட்சி வழங்க முடியும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது சென்னை சுத்தமாக உள்ளது. மக்கள் உங்களை நம்புகிறார்கள். உங்கள் அரசுக்கு தொடர்வதற்கு என்னுடைய ஆதரவை வழங்குகிறேன்" என்று கூறினார்.

தினகரனுக்கு பதில்
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்னார்குடி எம்எல்ஏ கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு என்று பேசியிருப்பது, கட்சி குறிக்கோள்களுக்கு எதிரானது. அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கும், அமமுகவுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார்.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 10 வருடங்களாக அமமுக கட்சிக்காக உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக கட்சியில் இருந்து நீக்கியதை எடுத்துக் கொள்கிறேன். கட்சி தலைமை முடிவு செய்யும்போத அதற்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். இதில் எந்த வருத்தமும் இல்லை. சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு வாக்களிப்பேன். சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து பேசியது தவறா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications