செம கடுப்பில் தினகரன்.. லட்டு போல அள்ளி தந்தும்.. அதிகரிக்கும் புகைச்சல்.. தேமுதிகவுக்கு என்னாச்சு!
தேமுதிக மீது தினகரன் சற்று அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் அமமுக - தேமுதிக கூட்டணியில் லேசான புகைச்சல்களும், அதிருப்திகளும், சில சுணக்கங்களும் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை எல்லாராலும் கழட்டி விடப்பட்ட தேமுதிகவை, கை தூக்கி ஆதரவு தந்தது அமமுக.. தேமுதிகவுக்கு 60 சீட்டுகளை லட்டு போல தூக்கி தந்தபோதே பலரது புருவங்களை இது உயர்த்தியது. இரு கட்சிகளுமே ஆளுக்கு ஒரு பக்கம் களப்பணியில் இறங்கினர்..
கோவில்பட்டியில் பெரும்பாலும் நாயுடு சமுதாயத்தினரே மிகுந்துள்ளதால், அவர்களின் வாக்குகளை எளிதாக பெறவே தேமுதிகவுடன் தினகரன் கூட்டணி வைத்துள்ளது மறுக்க முடியாத காரணமாக உள்ளது. தனக்கு தேமுதிக உதவும் என்று அமமுக கணக்கு போட்டால், அமமுக தனக்கு உதவும் என்றுதான் தேமுதிகவும் கணக்கு போட்டது.. ஆனால், இங்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரச்சாரம்
இதுவரை தேமுதிகவை தாங்கி பிடித்து கொண்டிருப்பதே விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதர்தான்.. முன்பெல்லாம் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றாலே, ஒருவித பரபரப்பும், எதிர்பார்ப்பும், மீடியா உலகில் பற்றிக் கொள்ளும்.. செய்தியாளர் சந்திப்பே இப்படி என்றால், விஜயகாந்தின் பிரச்சாரங்கள் சொல்ல தேவையில்லை.
விஜயகாந்த்
சிங்கம் போல கர்ஜித்து கொண்டிருந்த விஜயகாந்த் சத்தமில்லாமல் முடங்கி போய்விடவும், அந்த கட்சி நட்சத்திர பேச்சாளர் யாருமே இல்லாத கட்சியாக முடங்கியது.. பிரேமலதா தன்னை ஒரு பேச்சாளராக உயர்த்தி கொண்டாலும், தேமுதிகவை தூக்கி நிறுத்த அது போதவில்லை.. விஜயபிரபாகரன் வாயே திறக்க வேண்டாம் என்பது போல சில சமயங்களில் தோன்றிவிடுகிறது.. பிரேமலதா அளவுக்கு சுதீஷிடமும் பேச்சாற்றல் இல்லை.. இந்த கட்சியில் இவர்கள் 3 பேரை தவிர வேறு யார் பேச்சையும் மக்கள் அவ்வளவாக பார்த்திருக்க வாய்ப்புமில்லை.
வேட்பாளர்கள்
இப்போது சிக்கல் என்னவென்றால், நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாததால், தேமுதிகவின் வேட்பாளர்கள் பரிதவித்து வருகின்றனராம்.. கூட்டணி பலமாக இருந்தும், வேட்பாளர்கள் அவ்வளவாக பிரபலமானவர்கள் இல்லை.. அதனால்தான் இவர்களுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் தேவைப்படுகின்றனர்.. விஜயகாந்த் வெளியில் வருவதில்லை... விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுவதால், அந்த தொகுதியில் வென்றெடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறார்.
சுதீஷ்
அதனால், சுதீஷ், விஜயபிரபாகரன் 2 பேர்தான் பிரசாரம் செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது சுதீஷூக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. ஆஸ்பத்திரியில் உள்ளார். திருத்தணியில், வரும், 26ம் தேதி, சுதீஷ் பிரசாரத்தை துவங்கி, நீலகிரி மாவட்டம், கூடலுாரில், ஏப்ரல் 4ம் தேதி முடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது... ஆனால் சிகிச்சை முடிந்துதான் வருவார் போலும்.. மிச்சமிருப்பது விஜயபிரபாகரன்தான்..
அதிருப்தி
இவர் என்ன பேச போகிறாரோ? யாருடைய அதிருப்தியை சம்பாதித்து கொள்ள போகிறாரோ தெரியவில்லை.. அதனால் முழுக்க முழுக்க தினகரனை நம்பியே பிரசாரம் செய்யும் நிலைமைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது.. ஆனால், தினகரனோ, கோவில்பட்டி உட்பட தன்னுடைய தொகுதிகளில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.. இதனால், திமுகவுக்கு மாற்றாகவும், அதிமுகவுக்கு செக் வைக்கும் நோக்கில் களம் இறங்கி உள்ள அமமுக கூட்டணியின் பிரச்சாரம் தற்சமயம் சுணக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.. எனினும் மொத்த கூட்டணியையும் தினகரன், தாங்கி பிடித்து தூக்கி விடுவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.