கொந்தளிக்கும் கடல்..மாண்டஸ் புயலால் காற்றின் வேகம் அதிகரிக்கும்..மீனவர்களே கவனம் - பாலச்சந்திரன்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். டிசம்பர் 10ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. இது வேகமாக நகரத் தொடங்கியுள்ளது. இந்த புயல் நாளை இரவு புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், கனமழையைப் பொருத்தவரைக்கும் 8ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்று வீசும்
சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காலையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புயல் கரையை கடக்கும்.

காற்றின் வேகம்
நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யம் டிசம்பர் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications