தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:போலீஸ் அதிகாரி திருமலை அதிரடி சஸ்பெண்ட்.. விசாரணை அறிக்கையால் உத்தரவு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போதைய நெல்லை மாநகர உதவி ஆணையராக திருமலையை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நீண்டகாலமாக போராடினார்கள்.
இந்த போராட்டம் என்பது 2018 ல் வலுவடைந்தது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. போலீசின் இத்தனை கொடூர வன்மத்துக்கு எது காரணம்? பழ.நெடுமாறன் கேள்வி
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
தூத்துக்குடியில் பதற்றமான சூழல் ஏற்படவே தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பொதுமக்கள் அமைதியான வழியில் போராடினர். இந்த போராட்டம் 100வது நாளை எட்டியது. இதையடுத்து 2018 மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணை அறிக்கை தாக்கல்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்தார். இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அறிக்கை பரிந்துரைகள்
இதில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. தூத்துக்கடி கலெ க்டர் அலுவலகத்தில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். காட்டில் வேட்டையாடுவது போல் போலீஸ்கார் சுடலைக்கண்ணு செயல்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
யார் மீது நடவடிக்கை?
போலீஸ் துறையை பொறுத்தமட்டில் துப்பாக்கிச்சூடு நடந்த விவகாரத்தில் அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் ஆகியோர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
திருமலை சஸ்பெண்ட்
அதன்படி தான் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். தற்போது நெல்லை மாநகர சமூகநீதி-மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக திருமலை பணி செய்யும் நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.