இஸ்ரோ மையத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து.. டிவி ஒளிப்பதிவாளர் பலி - அன்புமணி முக்கிய கோரிக்கை!
சென்னை: சந்திரயான் 3 பற்றி செய்தி சேகரிப்பதற்காக இஸ்ரோ மையத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டு தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம், நேற்று மாலை சந்திரனின் தென் துருவத்தில் இறங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பதித்த முக்கியமான இந்தத் தடம் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்று திரும்பும் போது தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் விபத்தில் பலியாகியுள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார். நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம், புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மூவரும் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த செய்தியாளரின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்த செய்தியாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
உயிரிழந்த, காயமடைந்த செய்தித்துறையினர் அனைவரும் சந்திரயான் 3 விண்கலம் குறித்து செய்தி செகரிப்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்று திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும்; எவ்வளவு அவசரமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன்.
கடமை மிகவும் முக்கியம் என்றாலும் கூட, அதை விட நமது பாதுகாப்பும், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரும் முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு செய்தியாளர் குழுவினர் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications