தேர்தல் கூட்டணி யாருடன்? தவெக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் மேஜர் ஆலோசனை! விரைவில் குழு!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு மக்களை நேரில் சென்று பொதுக் கூட்டம் நடத்தி சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார். அதோடு ஆளும் கட்சியின் மீது சில விமர்சனங்களையும் முன் வைத்தார்.
ஈரோட்டை தொடர்ந்து விஜய் அடுத்ததாக டிசம்பர் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படியான சுழலில் இன்று 2026 தேர்தல் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அடுத்தகட்ட தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ஈரோட்டில் மக்கள் சந்திப்பை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, விஜய்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளார் செங்கோட்டையன். இந்த நிலையில், தவெக உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு ஒன்றை தவெக அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்கள் குறித்து பேசினார். செங்கோட்டையன் பேசுகையில், “தவழும் குழந்தைகள் தான் பெரியவர் ஆவார்கள், பெரியவரான பின் தான் தன்னாட்சி நடத்துவார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவு தீர்ப்பளிக்கும். பொங்கல் முடிந்ததற்குப் பிறகு, எங்களுடைய திருப்புமுனையை பார்த்து நாடே வியக்கும்.“ என்றும் தெரிவித்திருந்தார்.
முன்பு கூட்டணி பற்றி பேசியிருந்த செங்கோட்டையன், விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தவெக முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications