ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!
சென்னை: எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று அறிமுகப்படுத்துகிறார்.
கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி 3 கட்டங்களாக நடைபெற்று வந்தது. இப்படி இருக்கையில், நேற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தற்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார் விஜய்.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மொத்தமுள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் வைத்து விஜய் அறிமுகப்படுத்துகிறார். முன்னதாக புதுச்சேரியில் வேட்பாளர்கள் தேர்வுக்கு, பணம்தான் முக்கிய காரணியாக பார்க்கப்பட்டதாக தவெக மீது விமர்சனங்கள் எழுந்தன.
கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், ரூ.5 கோடி வரை நிதி கேட்கப்படுகிறது என்றும் தவெகவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஊழலை ஒழிப்போம் என்று பேசி கொண்டு வேட்பாளராக நிற்க ரூ.5 கோடி கேட்பதை எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த விவகாரம், தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இப்படித்தான் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்களா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் வேட்பாளர் அறிமுகம் கவனம் பெற்றிருக்கிறது.
விஜய் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இதில் வெளியாகும் என்பதால், தவெக தொண்டர்களை தாண்டி, விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
முன்னதாக அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பெரம்பூரை கூட்டணி கட்சிக்கு அதிமுக ஒதுக்கியிருந்தது. விஜய்யை உண்மையாகவே அதிமுக எதிர்கிறது எனில், பெரம்பூரில் அதிமுக நேரடியாக களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி அப்படி செய்யவில்லை. இது, விஜய்க்காக அதிமுக விட்டுக்கொடுக்கிறதோ? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications