Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு வேல்முருகன், 24 மணி நேரம் கெடு விதித்துள்ள நிலையில் அக்கட்சிக்கு அதிமுகவில் இருந்து பெரிய ஆஃபரை கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தங்களுக்குத் தனிச் சின்னம் வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுக தரப்பில் "பழையபடி ஒன்று மட்டும்தான் தர முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

10 அம்சக் கோரிக்கைகள்: வெறும் தொகுதிகள் மட்டுமல்லாது, கொள்கை ரீதியான 10 கோரிக்கைகளை வேல்முருகன் முன்வைத்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு.
- தமிழக அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே முன்னுரிமை.
- சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துதல்.
என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
"எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கவில்லை என்றால், கூட்டணியைத் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்" என வேல்முருகன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எ.வ. வேலு மூலம் பேச்சுவார்த்தை நடத்திய திமுக தலைமை, "புதிய கூட்டணிக் கட்சிகள் (தமிழக வெற்றிக் கழகம் போன்ற காரணிகள்) மற்றும் பிற தோழமைக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் இடங்கள் தருவது கடினம்" எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், வேல்முருகனைத் தக்கவைக்க முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். இதனால் நாளை அதாவது 24 மணி வரை திமுகவுக்கு தவாக கெடு விதித்துள்ளது. அதற்குள் திமுக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து விலகுவோம் என தவாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாவட்டங்களில் பாமக (அன்புமணி அணி) தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளதால், வேல்முருகனும் இணைந்தால் வன்னியர் வாக்குகளை முழுமையாகத் திரட்டி மெகா வெற்றியைப் பெறலாம் என அதிமுக கணக்கு போடுகிறது.
திமுகவில் கடந்த 5 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதாக வேல்முருகன் உணர்வதால், அதிமுகவில் அவருக்குக் கூட்டணியின் "முக்கிய முகமாக" முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தூது அனுப்பப்பட்டுள்ளதாம்.
"வேல்முருகன் போனால் வன்னியர் வாக்குகளில் சரிவு ஏற்படும்" என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், அவரைச் சமாதானப்படுத்த அமைச்சர் எ.வ. வேலுவை திமுக மேலிடம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளதாம்.
ஒருவேளை வேல்முருகன் அதிமுக பக்கம் சாய்ந்தால், அது திமுக கூட்டணியில் ஏற்படும் முதல் பெரிய விரிசலாகப் பார்க்கப்படும். குறிப்பாக, வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பெரும் சவாலுக்கு உள்ளாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications