“திமுகவிற்கு BP எகிறிடுச்சு.. உதயநிதி பதறத் தொடங்கிவிட்டார்”.. தவெக ஐடி விங் பதிலடி
சென்னை: "தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்." என தவெக ஐடி விங் திமுகவை கடுமையாகச் சாடியுள்ளது.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது என தவெக ஐடி விங் கூறியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தவெக அரசு கொடுத்த உரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆளுநர் ஆங்கிலத்தில் வாசித்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதனை தமிழில் வாசித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றி முடித்து வெளியேறும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வந்தது. இந்நிலையில் தவெக அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைத்துள்ளது. மேலும், நிகழ்வு முடிந்தபிறகும் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை திமுக ஐடி விங் கடுமையாக கண்டித்துள்ளது.
திமுக ஐடி விங் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு. இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித்தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது திமுக. தற்போதைய டம்மி சிஎம் அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது. மாற்றம் - மாற்றம் என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது. வாயை திறக்காத டம்மி சிஎம் தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தவெக ஐடி விங் பதில் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர்.
Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று. சட்டம் ஒழுங்கு டிஜிபி கூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி" எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications