"என் கணவரை கண்ணில் கூட காட்டவில்லை".. தவெக கரூர் மா.செ மதியழகன் மனைவி கண்ணீருடன் பேட்டி!
கரூர்: தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மதியழகனை கைது செய்து போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும், அவருக்கு என்ன நடந்தாலும் காவல்துறை தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலரும் நேரில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் அரசியல் பலத்தை காட்டுவதற்காக விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்றும் மக்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதன் விளைவாக, மேற்படி சம்பவத்தில் அதிக அளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ எஸ் பி பிரேம் ஆனந்த் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் உள்ள தவெக கட்சி நிர்வாகி வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதியழகனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் காவல்துறை எச்சரிக்கையையும் மீறி நிபந்தனைகளை கடைப்பிடிக்காதது குறித்தும் கூடுதல் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவெக மாவட்ட செயலாளர் மதியழகனிடம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதியழகனின் மனைவி ராணி, மதியழகனை கைது செய்து போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும், கூட்ட நெரிசலில் சிக்கி தானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பியதாகவும், தனது கணவரை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என்ற இடத்தை கூறுமாறு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் மனைவி ராணி கண்ணீர் மல்க பேசுகையில், "எனது கணவரை கைது செய்த போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி நானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பினேன். என் கணவர் மீது சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு. அஜித் குமார் லாக்கப் டெத் போல என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications