தேர்தல் முடிவுகளுக்கு முன்பே.. 233 வேட்பாளர்களுக்கும் ராஜ விருந்து கொடுக்கும் விஜய்.. காரணம் என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக தவெகவின் 233 வேட்பாளர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் ராஜவிருந்து அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், அதனை சமாளிக்க விஜய் இப்போது இருந்தே திட்டமிட தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தமாக 234 தொகுதிகளில் சேர்த்து 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலை ஒப்பிடும் போது, சுமார் 25 லட்சம் வாக்குகள் வரை கூடுதலாக பதிவாகி இருக்கிறது. மொத்தமாக 4.88 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த முறை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தவெகவும் கடுமையான சவாலை அளித்து வருகிறது. வாக்குப்பதிவின் போதே கணிசமான பெண்களின் வாக்குகள் தவெக பக்கம் செல்வதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிமுக பலவீனமாக இருக்கும் தென் மாவட்டங்களில் தவெக வேகமாக வளர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சென்னையிலும் தவெக பல தொகுதியில் 2வது இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் தவெகவினரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக தலைவர் விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் போட்டுவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே 233 வேட்பாளர்களும் பனையூர் வரவழைக்கப்பட உள்ளனர்.
தவெகவுக்காக தேர்தல் களத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்ட உள்ள விஜய், 233 வேட்பாளர்களுக்கும் ராஜ விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த விருந்தில் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதன் மூலமாக தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என்று விஜய் நம்புகிறார்.
தவெக ஆட்சியை பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும், கட்சியினரை தயார்படுத்தும் முடிவில் விஜய் இருக்கிறார். ஒருவேளை தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், அடுத்தடுத்து ஆளுங்கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தும் முடிவில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மாநகராட்சி தேர்தலுக்கும் விஜய் தவெகவினரை தயார்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications