"கூத்தாடி" என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்ஜிஆர்.. பஞ்ச் வைத்து வாழ்த்திய விஜய்!
சென்னை: கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் என்று அவரது 108வது பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இறந்தும் வாழும் புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வணக்கம் என்று கூறியுள்ள விஜய், அளவற்ற வறுமையை தாண்டி தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார் என்றும் புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 108வது பிறந்தநாள் கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்தனர். அதேபோல் அதிமுக தரப்பில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கேக் வெட்டி, மாலை அணிவித்து, அதிமுக கொடியேற்றி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.

அதேபோல் அதிமுக தொண்டர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். தலைவர்களின் பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ள விஜய், எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக தனது படங்களில் எம்ஜிஆரை கொண்டாடியவர் விஜய். வசீகரா தொடங்கி மெர்சல் வரை விஜய் நடித்த பல்வேறு படங்களிலும் எம்ஜிஆர் புகைப்படங்களும், பாடல்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்தவர் என்று விஜய் பதிவிட்டிருப்பது விக்கிரவாண்டி மாநாட்டை அவரது கட்சியினருக்கு நினைவுப்படுத்தியுள்ளது.

ஏனென்றால் கூத்தாடி என்ற சொல்லுக்கு பின் விஜய் அளித்த விளக்கம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியது. அதில் விஜய், கூத்தாடி என்ற பெயர் எனக்கு மட்டும் வந்ததில்லை. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோருக்கும் வந்தது. அவர்கள் கட்சி தொடங்கிய போதும் கூத்தாடி என்று தான் கூப்பாடு போட்டார்கள். அவர்களை கூறியவர்கள் நம்மை மட்டும் விடுவார்களா என்ன..
அந்த 2 கூத்தாடிகளும் தான் இரு மாநிலத்தின் மாபெரும் தலைவர்களாகி, இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்கா புகழுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று பேசியிருந்தார். இன்று அதே கூத்தாடி என்ற வார்த்தையின் மூலமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications