விஜய் மன்னிப்பு கேட்கணும்.. பத்திரிகையாளர்களை தாக்குவதா.. சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், தவெகவின் 2ஆம் ஆண்டு விழா தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். பெரும்பாலும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணியாற்றிய அரசியல் கட்சிகள் தேர்தல்களில் பெருவெற்றியை பெற்றுள்ளன. இதனால் தமிழக அரசியலில் விஜய் மிகப்பெரிய சக்தியாக உருவாகுவார் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த 2ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். விழா அரங்கில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் நிர்வாகிகள் விழா அரங்கிற்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்ஃபோன் எடுத்து செல்ல கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக 2ஆம் ஆண்டு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் செல்ல முயற்சித்த போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய போதும், பவுன்சர்கள் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை தரக் குறைவாக பேசி திட்டியதோடு, பத்திரிகையாளர் இளங்கோவன் சீனிவாசன் மீது கொலைவெறி தாக்குதலையும் நடத்தி இருக்கின்றனர். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்த பத்திரிகையாளர் இளங்கோவன் சீனிவாசன் சக பத்திரிகையாளர்களின் உதவியுடன் செல்லப்பட்டார்.
பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் நடத்திய அட்ராசிட்டி பத்திரிகையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல்.

பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் தவெக நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் சங்கர் தரப்பில், தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மோசமான செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தவெக தலைவர் உடனடியாகத் தலையிட்டு மன்னிப்புக் கேட்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications