மதுரையில் தவெகவின் 2வது மாநாடு.. தேதி மாற்றத்தை அறிவித்த விஜய்.. பின்னணியில் உள்ள காரணம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ல் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெக மாநாடு தேதியை மாற்றக் கோரி காவல்துறை தரப்பில் கேட்டுக் கொண்ட நிலையில், 4 நாட்களுக்கு முன்பாகவே தவெக மாநாடு நடக்கும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் தவெக சார்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஜூலை 16ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே உள்ள எலியார்பத்தி பகுதியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் தவெக சார்பாக அனுமதி கடிதமும் அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை தரப்பில் ஒப்புதல் கடிதம் அளிக்கப்படவில்லை. இதனால் தவெக சார்பாக நீதிமன்றத்தை நாட ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக புஸ்ஸி ஆனந்த் மதுரை வந்தார்.
அப்போது மதுரை காவல்துறை தரப்பில், ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22 வரை ஒரு தேதியில் மாநாடு நடத்துங்கள். தவெக மாநாடு நடக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து அடுத்த 2 நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றி மீண்டும் அறிவிக்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தவெக மதுரை மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால் மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி வருவதால், காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்த காவல்துறை கேட்டுக்கொண்டது.
அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள். ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications