ஆதவ் அர்ஜூனா மீது அதிருப்தி.. திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் கட்சி மாறிய தவெகவினர்!
சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ளனர். திமுகவில் இணைந்த அனைவரையும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வரவேற்று உங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை இல்லத்தில் வந்து சந்திக்கலாம். உங்கள் குறைகளை என்னை நேரில் சந்தித்து சொல்லலாம் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இவரது வருகையால் நட்சத்திர தொகுதியாக வில்லிவாக்கம் தொகுதி மாறி இருக்கிறது. இவருக்கு எதிராக திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். இதுதவிர அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ரோஷினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைந்த இளைஞர்கள் அனைவரையும் கார்த்திக் மோகன் வரவேற்று உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் என்னை இல்லத்தில் வந்து சந்திக்கலாம். உங்கள் குறைகளை என்னை நேரில் சந்தித்து சொல்லலாம் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் மோகன் பேசுகையில், "தமிழக வெற்றி கழக கட்சியில் சரியாக அணுகுமுறை இல்லை என்று அதிருப்தியில் இருந்தார்கள். யாராக இருந்தாலும் திமுகவில் இடம் உள்ளது என்று என்னிடம் சொன்ன பொழுது நான் கூறினேன். என்னை நம்பி வந்தால் வரச் சொல்லுங்கள் என்று கூறினேன். தற்போது அனைவரும் வந்திருக்கிறார்கள் சந்தோஷமாக வரவேற்கிறேன். இளைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன்" என்றார்.
தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த இளைஞர் கூறுகையில், "எங்களுக்கு விஜய்யை பிடிக்கும். ஆனால் அவருக்கு கீழே இருப்பவர்களை சந்திப்பது மிகவும் கடினமாக உள்ளது. கார்த்திக் மோகனை எளிமையாக அணுக முடிகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் ஆதார் அர்ஜுனா நிற்கிறார். ஆனால் அவரைச் சென்று அணுகுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. 20 பேரை தாண்டி தான் ஆதவ் அர்ஜுனாவை அணுக முடியும். ஆதார் அர்ஜுனாவை பார்க்கவே முடியாது.

தமிழக வெற்றி கழகம் உருவானதில் இருந்து கட்சியில் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆதவ் அர்ஜுனாவை எளிமையாக நெருங்க முடியாது. கீழே இருப்பவர்கள் மற்றவர்களை நெருங்க விடாமல் தடுப்பதால் சோர்வு ஏற்படுகிறது. இதனால் கட்சி பணி செய்ய முடிவதில்லை. எல்லா மாவட்டங்களிலும் இதே போன்ற நிலை தான் உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications