அஜிதாவுக்கு பின்னணியில் திமுகவின் முக்கிய புள்ளிகள்.. கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் தவெக முகில்!
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதாவை இயக்குவது திமுக தான் என்றும், அனிதா ராதாகிருஷ்ணனும், கனிமொழியும் இணைந்து நடத்திய கபட நாடகம் தான், அஜிதா தவெக தலைமைக்கு எதிராக போராடுவதற்கு பின்னணி என்றும் தவெக நிர்வாகி முகில் நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், மாவட்டச் செயலாளர் பதவி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது மறுக்கப்பட்டதால், பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அஜிதா ஆக்னல். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தூக்க மாத்திரை உட்கொள்ள காரணமாக அமைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தவெக தலைமை இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தவெகவை சேர்ந்த முகில் வீரப்பன், அஜிதாவை திமுக தான் இயக்கி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் முகில் வீரப்பன்.
முகில் அளித்துள்ள பேட்டியில், "கரூர் நிகழ்வில் 41 பேர் பலியான சம்பவம் என் மனதை உலுக்கியது. தாமிரபரணி படுகொலை பற்றி நாம் தொடர்ச்சியாக பேசி வருகிறோம். கூலி உயர்வுக்காக போராடிய மக்களை கொடூரமாக தண்ணீரில் தள்ளிவிட்டு அடித்துக் கொல்லப்பட்டனர். இன்றைக்கு 41 தமிழர்கள் பலியானதற்கு யார் காரணம் என அலசி ஆராய்ந்தோம். மயக்க நிலையில் கிடந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி புகைப்படம் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தது? செந்தில் பாலாஜி படம் ஒட்டிய ஆம்புலன்ஸ் எப்படி உள்ளே வந்தது?
திமுக எப்படியாவது விஜய்யை பழி வாங்க வேண்டும், எப்படியாவது இந்தக் கட்சியை முடக்க வேண்டும் என நினைக்கிறது. ஆண்டாண்டு காலமாக அதிமுக vs திமுக என்ற நிலை இருந்த நிலையில் எதிர்காலத்தில் அதிமுக உடன் திமுக கூட்டு சேர்ந்து வாக்கு கேட்கும் நிலைக்கு தள்ளப்படும். விஜய் வருகைக்குப் பிறகு இது சாத்தியமாகும். சிறுவர்களை பக்குவமாகப் பயிற்றுவித்து போர்க்களத்திற்குத் தயாராக்கும் வேலையைச் செய்கிறது தவெக.
பனையூரில் தவெக கட்சியினர் போராடுவது போல செய்வது திமுகவின் சதி வேலைகள். தூத்துக்குடியில் இருந்து அஜிதா என்பவர் வந்து விஜய் காரில் விழுந்து நாடகம் நடத்தினார். இது அனிதா ராதாகிருஷ்ணனும், கனிமொழியும் இணைந்து நடத்திய கபட நாடகம். எங்கள் குடும்பத்துக்குள் சிறு சிறு சச்சரவுகள் உண்டு. உட்கட்சிப் பூசலுக்கு கொலை செய்யும் அளவுக்குச் செல்வது திமுகவில் தான் நடந்தது. ஒரே குடும்பத்திற்குள் அதிகாரப் போட்டியால் எரித்துக் கொன்றீர்களே அதுபோல தவெகவில் நடந்ததா?
காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளரை தலைவர் அறிவிக்கிறார். 10.15 மணிக்கு 50 பேருடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விஜய் மத்திய பாதுகாப்பு படை வளையத்திற்குள் இருப்பவர். அவரால் உடனே நினைத்தவுடன் இறங்கி வந்து பேச முடியாது. அஜிதாவின் அண்ணன் ஒரு கொலை குற்றவாளி எனச் சொல்லப்படுபவர். அவர்களின் பின்னணி என்ன என்பதை கட்சி அலசி ஆராயும்.
அஜிதா தனியாக வந்து பேசி இருந்தால் அழைத்துப் பேசி இருக்கலாம். கலவர நோக்கத்தோடு 50 பேரை திரட்டி வந்து போராடினால் எப்படி பேச முடியும்? தவெக தலைவர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு நடப்பேன் என்றுதானே அஜிதா சொன்னார்.. அவரா தூக்க மாத்திரை போடச் சொன்னார்? திமுக அனுப்பிய ஆளை எப்படி உள்ளே அழைத்துப் பேச முடியும்? திமுக அனுப்பிய ஆள் என்பதால் தான் அஜிதாவை விஜய் அழைத்துப் பேசவில்லை.
தவெக தலைவர் விஜய்யை கொலை செய்யும் முயற்சியோடு திமுக தான் அஜிதாவையும் 50 பேரையும் அனுப்பியது. கரூரில் விஜய் மீது செருப்பை தூக்கி வீசியது திமுககாரர். விஜய் விஷயத்தில் திமுக நடந்து கொள்கிற விதத்தைப் பார்த்தால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் அஜிதா எங்கு சென்று சேர்கிறார் என்று பாருங்கள், அப்போது புரியும்" எனக் கூறியுள்ளார் முகில்.












Click it and Unblock the Notifications