தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர் தாக்குதல்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை!
சென்னை: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வலிறுத்தியதன்பேரில் மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்தும் இலங்கை ராணுவத்தினர் திருந்துவதாக தெரியவில்லை.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்.. பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து.. நன்றி சொன்ன அண்ணாமலை
தொடர்ந்து அத்துமீறல்
அவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் தங்கள் பகுதியில் நுழைந்து விட்டதாக கூறி 23 பேரையும் இலங்கை ராணுவம் சிறை பிடித்து ஊர்க்காவல் பகுதியில் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
வேல்முருகன் கோரிக்கை
இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இலங்கை சிறையில் அடைத்தது
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்தது. மேலும், 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.
வன்மையாக கண்டிக்கத்தக்கது
இதன் தொடர்ச்சியாக, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகை கவிழ்த்து உள்ளது. இதில், 2 மீனவர்கள் உயிர் தப்பிய நிலையில், மீனவர் ராஜ்கிரன் என்பவர் நீரில் மூழ்கி மயமானார். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒன்றிய, மாநில அரசுகள்
எனவே, மீனவர் ராஜ்கிரணை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்து, இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதரை கைது செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தமிழர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், இருநாட்டு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.