உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதா? பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை கற்பிக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு இந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2.12.2019 அன்று இதற்கென நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, மொழியைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தார்.
இந்தி மற்றும் பிரெஞ்சு வகுப்புகள் நடத்த 6 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழாராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் தமிழைப் பரப்புவதற்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழியை கற்பிப்பது வேண்டுமென்றே செய்யும் காலித்தனமாகும்; தமிழை ஒழித்துக்கட்டும் இரண்டகச் செயலாகும்.
வெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம்
தமிழாராய்ச்சி நிறுவனம்
இதனால் தமிழ் நிலத்தை தமிழ் இனத்தை அழிக்கப் பார்க்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசுக்குத் துணைபோவதாகும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970இல் இருந்து செயல்படத் துவங்கியது. தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் சிறப்பை, பெருமையை அயலவருக்கு எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும் நிறுவனமும் பயன்கொள்ளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்கு மற்றும் தலையாய நோக்கமாகும். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும்.இந்த முக்கிய நோக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு இந்தி பிரச்சார சபாவோடு இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தி கற்பிப்பதென்பது வெளிப்படையாகவே இந்தி மொழி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.
இந்தி பிரசார சபாவுக்கு இடைத்தரகு
இதன் மூலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற மிக உயரிய அமைப்பை, இந்தி பிரச்சார சபாவின் சான்றிதழை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்கான இடைத்தரகராக வேலைபார்க்கும் அமைப்பாக்கியிருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். தமிழாய்வு மாணவர்களை பன்மொழி வல்லுநர்களாக உருவாக்குவதே லட்சியம். இங்கே எம்ஏ, எம்ஃபில், பிஎச்டி என 101 மாணவர்கள் படிக்கிறார்கள். மொழியியல் படிப்பவர்களுக்கு கூடுதலாக வேறு மொழிகள் (ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி) தெரிந்திருப்பது நல்லது என்ற அடிப்படையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது" என்கிறார் மாஃபா.
இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்?
நாம் கூறுவது: இவர் வேண்டுமானால் பல மொழிகளைக் கற்கட்டும்; மாணவர்கள் பல மொழிகள் கற்க வேண்டும் என்று திணிப்பதை எந்தத் தனம் என்பது? இந்தியைத் திணிக்க தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவரே இடைத்தரகராக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?
பாண்டியராஜனுக்கு கண்டனம்
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ் ஒழிப்புத் துறை அமைச்சராகச் செயல்படுவது, ஒரே நேரத்தில் ஒன்றிய அரசுக்கு துணை போவதும், தமிழக அரசை வைத்தே தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்ற செயலாகும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்போய் இந்தியைக் கற்பிக்கும் செயல் தமிழை மட்டுமல்ல; தமிழ் நிலத்தை தமிழ் இனத்தை அழிக்கத் துணைபோவதாகும்! இதனை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.