உச்சத்தை உதறிட்டு வந்திருக்கேன்.. உங்கள் வாக்கு தீர்மானிக்கட்டும்.. ஆக்ரோஷமாக பேசிய தவெக விஜய்!
சென்னை: “எனது கரியனின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். அதற்கான ரிசல்ட் உங்கள் ஒவ்வொருவரின் கை விரலிலும் இருக்கும்போது எனக்கென்ன கவலை?” என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியுள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். பின்னர் தவெக-வின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. அதன்பின், கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் மேடையில் அறிவிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். விஜய் பேசுகையில், “ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து காத்திருந்து உழைத்து உழைத்துச் சுற்றிச் சுழன்று மேலே வந்தவன் நான். ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு மனிதனுக்கு உருமாற்றம் நடக்கும்.
ஒரு சாதாரண இளைஞனாக இருந்த விஜய் ஒரு நடிகனாக மாறினான். அந்த நடிகன் ஒரு வெற்றி பெற்ற நடிகனாக மாறினான். அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்த பொறுப்புள்ள மனிதன், ஒரு பொறுப்பான தொண்டனாக மாறினான். இன்று பொறுப்பான தொண்டனாக இருக்கும் அவன் நாளைக்கு.. அதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இப்போது என்னை அரசியல் களத்திற்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். எப்போதும் போல ஓய்வின்றி உழைப்பேன். அதற்கான ரிசல்ட் உங்கள் ஒவ்வொருவரின் கை விரலிலும் இருக்கும்போது எனக்கென்ன கவலை. எல்லாமே நல்லாவே வொர்க்- அவுட் ஆகும் பாருங்க..
தேர்தல் அரசியலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் அத்தனை பேரின் பாடங்களையும் படித்துவிட்டு, ஒவ்வொருவரின் உந்துதலையும் ஊக்கமாக எடுத்துக்கொண்டு, என்னோட கரியரின் உச்சத்தை.. எப்படி.. எனது கரியரின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன்.
நம்பி நடப்போம்! நம்பிக்கையோடு நடப்போம்! தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு அரசியலின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் மாறி அத்தனை அரசியல் அழுக்குகளையும் அடித்து துவைத்து நீக்கும். அதனை தீர்மானிக்கட்டும் உங்கள் போக்கும், உங்கள் வாக்கும்! தமிழ்நாட்டின் வெற்றிக்காக புதியதோர் விதி ஒன்றை புதுமையாகச் செய்வோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் விஜய் பேசுகையில், “பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும் பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம் சமூக சீர்திருத்தம் சமூக நீதி பகுத்தறிவு சிந்தனை, பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக்கூடாதா? ஏற்கெனவே உள்ள அரசியல்வாதிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; அதேநேரம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவும் போவதில்லை. கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது.” எனக் கூறினார் விஜய்.












Click it and Unblock the Notifications