மொழிக்காக போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம்.. தமிழ் காக்க உறுதியேற்போம்.. விஜய் போட்ட ட்வீட்!
சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். மேலும், உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
ஜனவரி 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் 32 லட்சம் செலவில் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நினைவிடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றி உள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications