கூத்தாடினா கெட்ட வார்த்தையா? அவனுக்குள்ள கோபம் கொப்பளிச்சா என்னாகும் தெரியுமா? விஜய் ஆவேசம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். கூத்தாடிகள் என விமர்சிக்கப்பட்டவர்கள் 2 மாநிலங்களையே ஆண்டார்கள் எனப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை விளக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். அது போலவே மாநாட்டு மேடையில் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள் குறித்து விஜய் பேசினார். விஜய் பேசுகையில், "சினிமாவில் இருந்து வந்திருப்பதால் இங்கு நிறைய பேர் என்னை கூத்தாடி கூத்தாடி என்று சொல்கிறார்கள். கூத்து என்றால் என்ன கெட்ட வார்த்தையா? கூத்து தான் இந்த மண்ணின் கலை. இதேபோல் தான் எம்.ஜி.அரசியலுக்கு வந்த போது சொன்னார்கள். அதேபோல் தெலுங்கில் என்.டி.ஆரை சொன்னார்கள். ஆனால் இந்த கூத்தாடிகள் தான் அந்த இரண்டு மாநிலங்களையும் ஆண்டார்கள். அவர்களையே கூத்தாடி என்று சொல்லும்போது நம்மைச் சொல்லமாட்டார்களா?
திராவிடம் வளர்ந்ததே சினிமாவை வைத்துத்தான். கூத்தாடி என்றால் கேவலமான சொல்லா? சினிமாவுக்கு வந்தபோது என்னை அவமானப்படுத்தினர். உழைத்து உழைத்து மேலே வந்த கூத்தாடி நான். தமிழர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல் கருவி தான் சினிமா. கூத்து சாதாரண வார்த்தையல்ல, சத்தியத்தைப் பேசும், சாத்தியத்தைப் பேசும்.
கூத்து தான் அரசியல், அறிவியல் என பல விஷயங்களை பேசியிருக்கிறது. அன்று கூத்தாக இருந்தது தான் இன்று சினிமாவாக மாறியிருக்கிறது. சினிமாவில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பிடித்து போராடித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு வாய்ப்புக்காகவும், ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து காத்திருந்து உழைத்து உழைத்துச் சுற்றிச் சுழன்று மேலே வந்தவன் நான்.
ஒரு சாதாரண இளைஞனாக இருந்த விஜய் ஒரு நடிகனாக மாறினான். அந்த நடிகன் ஒரு வெற்றி பெற்ற நடிகனாக மாறினான். அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்த பொறுப்புள்ள மனிதன், ஒரு பொறுப்பான தொண்டனாக மாறினான். இன்று பொறுப்பான தொண்டனாக இருக்கும் அவன் நாளைக்கு.. அதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்." என்றார்.
மேலும் பேசிய விஜய், "நம்மைப் பார்த்து யாரும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை.
நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை. இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை.
நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல. மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன்.
தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன். எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது.
பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் செய்வது என்ன பாயாசமா? எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications