மாமல்லபுரத்தில் ஆறுதல் சொன்னது ஏன்? விஜய் மீண்டும் சுற்றுப்பயணம் எப்போது? நிர்மல் குமார் அப்டேட்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியது ஏன் என்பது குறித்து தவெகவின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி சிவகங்கையில் தவெக சார்பில் மரியாதை செலுத்த நிர்மல் குமார் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனக்கு சிபிஐயிடம் இருந்து இதுவரை சம்மன் வரவில்லை. அப்படி வந்தால் நானும் புஸ்ஸி ஆனந்தும் நேரில் ஆஜராகி விளக்கமளிப்போம்.
யார் வேண்டுமானாலும் கரூர் சம்பவம் குறித்து ஆயிரம் குறைகளை சொல்லலாம். ஆனால் எங்களது வாழ்நாள் வருத்தம் அந்த 41 பேர் பலியானது. இந்த சம்பவம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும்.
கடைசி வரை அவர்களுடன் துணை நிற்போம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்தித்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால்தான் அந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் சொன்னார்.
நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்ட பிறகு விஜய் தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவார் என நிர்மல் குமார் தெரிவித்தார்.
கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் கடந்த 22-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவை சேர்ந்த சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தவெகவினருக்கு சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டார். அவர்களும் நகலை பெற்றுக் கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாகவும் அதன்படி செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என சொல்லப்பட்ட நிலையில் இதை நிர்மல் குமார் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications