ஆட்டத்தை ஆரம்பிக்கும் தவெக.. சேலத்தில் நாளை கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்!
சென்னை: சேலத்தில் நாளை மாலை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடக்கும் என தவெக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக் கழகப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், நம் கழகத்தின் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், நாளை (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதைக் நமது வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்துள்ளார். இதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தவெக செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்றையும் தவெக தலைமை வடிவமைத்திருப்பதாக கூறப்பட்டது. விரைவில் அதனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் ஜூலை 20ஆம் தேதியான இன்று தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நடக்கவிருந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தவெக தலைமை வடிவமைத்த புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பின், அதனை பரிசோதித்துவிட்டு மீண்டும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications