நவம்பர் முதல் வாரத்தில் தவெகவில் நடக்கும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய பொறுப்பு? விஜய் முடிவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கூட்ட ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பொதுக்குழுவில் தவெகவின் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்படலாம் என்றும், தவெகவின் புதிய அணிகளுக்கான செயலாளர்கள் நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பின் தவெக தலைமை முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் சைலண்ட் மோடுக்கு சென்றனர். இதனால் மாற்று கட்சிகளின் எதிர்வினைகளுக்கு கூட எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல் தவெக ஆதரவாளர்கள் திணறினர்.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து விஜய் சந்தித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்று விஜய் உறுதி கொடுத்துள்ள நிலையில், தவெக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. இதனிடையே தவெகவின் முக்கிய தலைவர்கள் மீது விஜய் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.
குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். தற்போது சிடிஆர் நிர்மல் குமார் மீண்டும் அரசியல் பணிகளுக்கு திரும்பிவிட்ட சூழலில், புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. நேற்றும் கூட விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் இல்லை என்றே கூறப்படுகிறது. அதேபோல் கரூர் சம்பவத்தின் போது டெல்லி வரை சென்று ஆதவ் அர்ஜுனா தான் சில பணிகளைப் பார்த்தார்.
அதேபோல் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், அவர் தைரியமாக சில முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே ஆதவ் அர்ஜுனாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் முதல் வாரத்தில் கூட்டப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுச்செயலாளர் பதவியை அளிப்பதோடு, புஸ்ஸி ஆனந்திற்கு வேறு பதவியை கொடுக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தேர்தல் நெருங்கிவிட்டதால், தவெகவின் புதிய அணிகளுக்கான செயலாளர்களை நியமிக்கவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கான அறிவிப்புகள் பொதுக்குழுவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் ஒரு மாதமாக விஜய்யை தவெக தொண்டர்களே பார்க்காததால், அடுத்தக் கட்ட செயல் திட்டங்கள் குறித்தும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தவெக தேர்தல் பணிகளை மும்முரப்படுத்த ஆயத்தமாகி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications