ராமதாஸ், ஓபிஎஸ்.. மெகா கணக்குடன் காத்திருக்கும் தவெக.. தமிழ்நாட்டின் கிங் மேக்கராகும் விஜய்!
சென்னை: தவெக தலைவர் விஜய் தங்களின் கூட்டணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வருவார் என்று காத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அப்படி இருவரும் வரும் பட்சத்தில் எப்படி கொங்கு மண்டலத்தை செங்கோட்டையன் வசம் கொடுத்தாரோ, அதுபோல் தென் மாவட்டங்களை ஓபிஎஸ் வசமும், வட மாவட்டங்களை ராமதாஸ் வசமும் கொடுக்க விஜய் முடிவெடுத்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களை பிடிப்பவர்களே ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கருத்து உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் 18 தொகுதிகளை மட்டுமே அதிமுக - பாஜக கூட்டணி வென்றது. அப்போது டிடிவி தினகரனின் அமமுக 23 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக மாறியது.

டிடிவி தினகரனுக்கு முக்குலத்தோர் சமூக மக்களே அதிகளவில் ஆதரவாக இருந்தனர். இதனை கணித்தே எடப்பாடி பழனிசாமி அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர ஒப்புக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இதனால் மறவர் சமூக மக்களின் வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே திமுக தரப்பிலும் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயக்கம் காட்டி வருகிறார். திமுகவினர் பதற்றம் அடைவதற்கு விஜய்யின் செல்வாக்கே காரணமாக உள்ளது. ஏனென்றால் விஜய் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை விஜய் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.
இதனால் திமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்தால் சரியாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. அதேபோல் ராமதாஸ் தரப்பை திமுக அணியில் சேர்ப்பது திருமாவளவன் கைகளில் மட்டுமே உள்ளது. அதிமுக - அன்புமணி பாமக கைகோர்த்துள்ளதால், வன்னியர்களின் ஆதரவு பெரும்பாலும் அந்த கூட்டணிக்கே செல்லும். இதனால் தலித் மக்களின் வாக்குகளை விட்டுவிடக் கூடாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது.
இதனால் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவருமே தவெக உடன் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. விஜய்யும் அதனை எதிர்பார்த்தே காத்திருக்கிறார். ஏனென்றால் செங்கோட்டையன் வசம் கொங்கு மண்டலத்தை விஜய் ஒப்படைத்துவிட்டார். செங்கோட்டையனால் குறைந்தபட்சம் ஈரோடு மாவட்டத்தில் தவெக வலுவடையும் என்றும் பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஓபிஎஸ் கைகோர்த்தால் தென் மாவட்டங்களில் அவர் வைத்து பிரச்சாரம் செய்யவும், முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யவும் சரியாக இருக்கும் என்று விஜய் கணித்துள்ளார். இதே காரணம்தான் ராமதாஸ்-க்கும். ராமதாஸ் இணைந்தால், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களின் வாக்குகளை தவெகவால் அறுவடை செய்ய முடியும்.
அதுமட்டுமல்லாமல் சீனியர்களான ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் விஜய்யுடன் கைகோர்த்தால், அது விஜய்க்கும் மிகப்பெரிய மைலேஜ் கொடுக்கும். இதனால் கணிசமான வாக்குகளை பெறுவதோடு, சில தொகுதிகளில் வெற்றியையும் பெற முடியும். இதன் காரணமாக விஜய் கிங் மேக்கராக மாறுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications