திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ல் 9 தொகுதி வென்ற தவெக.. அமைச்சரவையில் ஒருவருக்கு கூட இடமில்லை
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வென்ற மாவட்டம் என்றால் அது திருவள்ளுர் மாவட்டம் தான். திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ல் 9 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால் அம்மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.
தமிழக அரசியலில் மாவட்ட அடிப்படையிலான பிரதிநிதித்துவம் என்பது அந்த மாவட்டங்களில் எத்தனை எம்எல்ஏக்கள் ஜெயித்தார்கள்.. அந்த மாவட்டத்தில் செல்வாக்குமிக்க நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். அதேபோல் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி மற்றும் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக நியமிக்கப்படுவார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை புறநகரை ஒட்டியுள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, துறைமுகம் என வேகமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக ஆவடி, பொன்னேரி, திருவொற்றியூர் , கும்மிடிப்பூண்டி ஆகியவை தொழிற்பேட்டைகள் நிறைந்துள்ளது. இவ்வளவு வளர்ச்சி உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஒருவர் கூட அமைச்சராகவில்லை.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன. அதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆவடி தொகுதியில் வெற்றி பெற்ற சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
ஆனால் 10ல் 9 தொகுதிகளில் தற்போது தவெக வென்றுள்ளது. ஆனால் 9ல் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.. இது திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒருவர் அமைச்சராவார். திமுகவில் நாசர் என்றால், அதிமுகவில் மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்பும் சிலர் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். எனவே திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விஜய்யின் அமைச்சரவையில் சென்னையில் 7 பேரும், நாமக்கல் 3 பேரும், காஞ்சிபுரம், மதுரை, தஞ்சை, கோவை, ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடிக்கு தலா 2 பேரும், அதே போல் சேலம், திருப்பூர், ராமநாதபுரம், கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், ஆகிய மாவட்டங்கள் சார்பில் 11 பேரும் என பதவியேற்றுள்ளனர்.














Click it and Unblock the Notifications