பாஜக கைப்பாவை சிபிஐ என்று விளாசிய விஜய்.. நீதி வென்றதாக திடீரென கூறுவது ஏன்?
சென்னை: "சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?" என்று கடந்த ஜூலை மாதம் சென்னையில், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசியிருந்தார். ஆனால் இன்று, சிபிஐ விசாரணையை தவெக வரவேற்றிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஜூலை மாதம் 13ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்தான் விஜய் முதன்முறையாக பங்கேற்றிருந்தார். மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசுக்கும், திமுகவுக்கும், காவல்துறைக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஜய் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கைகளில் திமுகவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறிப்பாக விஜய்க்கு பக்கத்தில் இருந்தவர், "எஸ்ஐடி விசாரணை இருக்க, சிபிஐ விசாரணை எதுக்கு?" என்று கேள்வி எழுப்பிய பதாகையை ஏந்தியிருந்தார். அப்படி சிபிஐ விசாரணைக்கு எதிராக தவெகவினர் உச்சக்கட்ட கொந்தளிப்பில் இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், "சிபிஜ, பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஏன் அங்கே போய் ஒளிந்துக்கொள்கிறீர்கள்? நாங்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என கேட்டிருக்கிறோம். அந்த பயம்தான் ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் நீங்கள் ஒளிந்துக்கொள்ள காரணம்" என்று பேசியிருந்தார்.
ஆனால் இன்று, கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று சொன்னவுடன், தவெகவினர் நீதி வென்றது என்று கூறி கொண்டாடி வருகிறார்கள். இது அடிப்படையில் முரண்பாடு கொண்டதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தவெக தொண்டர்களை விட ஒருபடி மேலே சென்று, "நீதி வெல்லும்" என விஜய் ட்வீட் செய்திருப்பது, அவரது அரசியல் பேச்சுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
கரூர் கூட்டநெருக்கடி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம் !
— Bharath Plays (@BharathPlayz) October 13, 2025
சிபிஐ என்பது பாஜகவின் கைப்பாவை என விமர்சித்தார் விஜய், இப்போது சிபிஐ விசாரனையை ஏதோ பெரிய சாதனை போல கொண்டாடுகிறது தவெக !
மொத்தமா அடகு வச்சிட்டீங்களா டா 🤡🤡 pic.twitter.com/X0iIkmpXJN
முன்னதாக இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகிய நீதிமன்றங்கள் விசாரித்திருந்தன. இதில் சென்னை உயர்நீதிமன்றம் தவெகவை கடுமையாக சாடியிருந்தது. "இது எந்த மாதிரியான கட்சி? சம்பவம் நடந்த இடத்திலிருந்து கட்சியின் தலைவர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ஒடிவிட்டனர், தலைவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை, விஜய் வாகனத்தை ஏன் இன்னும் பறிமுதல் செய்யவில்லை? தலைவருக்கு தலைமை பண்பே இல்லை, ஆதவ் அர்ஜுனா ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தது.
மட்டுமல்லாது இது தொடர்பான வழக்கை வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அக்குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருந்தது. அதற்கு முன்னதாக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருந்தது.
ஆனால் இன்று இந்த இரண்டு விசாரணை அமைப்புகளையும் உச்சீநீதிமன்றம் கலைத்திருக்கிறது. "கரூர் டவுன் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மற்றும் முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆகியவை, FIR மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆவணங்கள், டிஜிட்டல் அல்லது பிற ஆதாரங்களை, மேலும் விசாரணைக்காக உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, அவை செயல்பட வேண்டியதில்லை" என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications