ராஜ்ய சபாவிலிருந்து மீண்டும் சட்டசபை திரும்பும் எம்பிகள்.. அதிமுக வேட்பாளர் பட்டியலில் இரு எம்பிகள்
சென்னை: தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோருக்கு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக சார்பில் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கொண்ட கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது.

வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், அதிமுக சார்பில் 171 இடங்களில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர்களை கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களால் அறிந்த முகங்களுக்கும், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்குமே அதிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக வலுவான ஓர் அணியைக் கட்டமைத்து வருவதால் அதை முறியடிக்க இந்த நடவடிக்கையை அதிமுக எடுத்துள்ளது.

எம்பிகளுக்கு வாய்ப்பு
இன்று வெளியான வேட்பாளர் பட்டியில் கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இருவரும் தற்போது மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர் இருவருக்கும் இன்னும், பதவிக்காலமும் நிறைவடையவில்லை. இதனால் இருவரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் எம்பி பதவியையோ அல்லது எம்எல்ஏ பதவியையோ ராஜினாமா செய்ய வேண்டும்.

வைத்தியலிங்கம்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் ராமச்சந்திரன் 3645 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்தியலிங்கத்தைத் தோற்கடித்து, அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.இதையடுத்து அதே ஆண்டு நடைபெற்ற மாநிலங்களைவை தேர்தலில் போட்டியிட்டு, அவர் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

கே.பி. முனுசாமி
முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் திமுகவின் இன்ப சேகரன் வெற்றி பெற்றார். பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இரண்டாம் இடம் பிடிக்க, கே. பி. முனுசாமி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வேப்பனஹல்லி தொகுதியில் போட்டியிட இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications