களமிறக்கப்பட்ட அதிமுக முக்கிய புள்ளி.. வலையில் 2 மீன்கள்.. திகிலில் அமமுக!
அமமுகவிலிருந்து மேலும் 2 பேர் அதிமுகவுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: செந்தில்பாலாஜி அணி தாவலுக்கு பிறகு சுணங்கிப் போய்க் காணப்படுகிறது அமமுக.. ஆனால் படு சுறுசுறுப்பாகிவிட்டது அதிமுக!
திமுகவுக்கு எப்படி சபரீசன் பின்னணியில் இருந்து வேலையை கவனித்து கொள்கிறாரோ, அதேபோல அதிமுகவிலும் மறைமுக வேலை நடக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே தங்கள் அணிக்கு வந்து விடுமாறு கூவி அழைத்து வந்தனர் முதல்வரும், துணை முதல்வரும். ஆனால் பகிரங்கமாக அழைத்தும் ஒருவரும் இதுவரை வந்து சேரவில்லை.
டிடிவி தினகரன் முடிவு
ஒருவேளை கட்சியில் உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம் அல்லது டிடிவி தினகரனின் அடுத்த கட்ட முடிவு என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு அணி தாவலாம் என்று ஆதரவு எம்எல்ஏக்கள் யோசனையில் இருந்ததாக சொல்லப்பட்டது.
முன்னணி அமைச்சர்
ஆனால் செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றபிறகு, "முன்னாள்"களை தங்கள் அணிக்கு கொண்டு வர திமுகவில் இறங்கியுள்ளது போல், அதிமுகவும் இப்போது இறங்கி உள்ளது. இதற்கான அசைன்மெண்ட் ஒரு முன்னணி அமைச்சருக்கும் தரப்பட்டுள்ளது.
செல்வாக்கு
அதன்படியே அமமுக ஆதரவு ஆட்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு செந்தில்பாலாஜி சென்றுவிட்ட நிலையில் அடுத்த முக்கிய புள்ளி தங்க.தமிழ்செல்வன்தான். இவருக்கு தனிப்பட்ட முறையில் தொகுதியில் செல்வாக்கு அன்றைக்கும் இருக்கிறது இன்றைக்கும் இருக்கிறது.
தடுமாற்றம்
எப்போது தேர்தலில் நின்றாலும் எளிதாக ஜெயித்து வந்துவிடக்கூடியவர் தங்க.தமிழ்செல்வன். அதனால் இவருக்குதான் இப்போது அதிமுக தரப்பில் அடி போடப்படுகிறது. எப்படி இருந்தாலும் டிடிவி தினகரன், சசிகலாவை விட்டுவிட்டு ஒருபோதும் அணி மாற மாட்டேன் என்று தங்க.தமிழ்செல்வன் சொல்லி கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் நிறையவே தடுமாறி உள்ளார்.
சமாதான பேச்சு
தகுதி நீக்க வழக்கு வந்ததிலிருந்தே இவரிடம் பலமுறை சமாதான பேச்சு நடத்தப்பட்டது. நேற்று சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகுகூட தங்க.தமிழ்செல்வனிடம் டிடிவி தினகரன் தனியாக பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, அமமுகவில் கதிர்காமு என்பவரும் அதிமுகவுக்கு எந்நேரமும் சென்றுவிடக்கூடும் என்று தகவல்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
கதிர்காமு
இனி அமமுகவிலிருந்து யார் ஒருவர் அணி மாறுவதாக இருந்தாலும், அது அந்தக் கட்சியை ஆட்டம் காண வைத்து விடும் என்றும், அதிலும் தங்க.தமிழ்செல்வன் அதிமுகவுக்கு சென்றுவிட்டால் அமமுக காலியாகி விடும் சொல்லப்படுகிறது. அதே சமயம் அதிமுகவுக்கு தங்க.தமிழ்செல்வன், கதிர்காமு இருவரும் வந்துவிட்டால், அதிமுகவுக்கு அது ஓரளவு வலு சேர்க்கும். குறிப்பாக தேனி மாவட்டத்தைப் பற்றி அதிமுக கவலைப்படத் தேவையிருக்காது என்றும் கருதப்படுகிறது.
அமமுக எதிர்காலம்?
ஏனெனில் தங்க.தமிழ்செல்வனுக்கு அதிமுகவில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை துணை முதல்வர்தான். ரெண்டு பேருமே தேனியை யார் வளைத்து போடுவது என்பதில் மும்முரமாக அப்போதிலிருந்தே இருந்து வருகிறார்கள். ஆனால் அவரை சமாளித்து, எப்படியாவது முக்கிய பொறுப்பை தருகிறோம் என்று அதிமுகவில் அந்த மூத்த அமைச்சர் சமாதானம் பேசி உள்ளார். எனவே இவர்கள் இருவரின் நிலையை வைத்துதான் அமமுகவின் எதிர்காலமே உள்ளது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.