தமிழகம்.. கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு உயர்வு.. அப்படியும், 2 குட் நியூஸ் இருக்குது
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும், முதல் முறையாக, இதுவரை இல்லாத அளவுக்கு, கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 643 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 718 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் ரொம்பவே குறைவாக பரிசோதனைகள் செய்து வரும் நிலையில், தமிழகம் அதிகம் பேரை பரிசோதித்திருப்பது நல்ல அறிகுறியாகும்.
தமிழகத்தில் ஊரடங்கை மொத்தமாக தளர்த்த முடியாது.. மருத்துவ நிபுணர் குழு
தமிழக நிலவரம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 138 பேருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 27 என்ற அளவில் உள்ளது.
உயிரிழப்பு இல்லை
நல்ல வேளையாக இன்று உயிரிழப்பு எதுவும் கிடையாது. இது ஒரு நல்ல செய்தியாகும். தமிழகத்தில், கொரோனா உயிரிழப்பு விகிதம் என்பது 1.16 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. இது உலகளவிலும், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டாலும், மிகவும் குறைவான அளவு என்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தியாகும்.
2 நல்ல செய்திகள்
தமிழகத்தில் 1,258 பேர் கொரோனா பிரச்சனையில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,035 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 44ல் இருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு இல்லை என்பதும், உயிரிழப்பு விகிதம் என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்பதும் தமிழகத்திற்கான நல்ல செய்திகளாகும்.
உரிய சிகிச்சை
ஏனெனில், கொரோனாவுக்கு தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சொந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன், சில உதவிகரமான மருந்துகள் மூலமாகத்தான், இவர்கள் குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், உரிய டயட் உள்ளிட்ட சிகிச்சைகளை தமிழக மருத்துவர்கள் சிறப்பாக வழங்கி வருவதுதான், இந்த நல்ல செய்திகளுக்கு காரணமாகும்.