பள்ளிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு.. அரசு வெளியிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகள்
சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்தது.இந்த பணி நேரம் கடந்த 2023ம் ஆண்டு மாற்றி வைக்கப்பட்டது. இதன்படி காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றப்பட்டது. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் மீண்டும் பள்ளி பணிநேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு நேற்று இரண்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறை நேர மாற்றம் தொடர்பாகவும், அரசு ஊழியர்களுக்கு பொதுவான பலனாக காப்பீடு தொடர்பாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, "தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்தது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சு பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டது.
ஆனால் பல்வேறு சங்கங்கள் அமைச்சு பணியாளர்களின் பணி நேர மாற்றம் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றம் செய்யப்படுகிறது.
அதேபோல, பணிநேரத்திற்கு பிறகு, வழக்கமான பணிகள் இல்லாமல், முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும்போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில், முறைப்பணிக்கு வரிசையாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அலுவலகம் வரும்படி அலுவலக தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது அறிவிப்பு காப்பீடு தொடர்பானது.. "அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடி நிதியை, விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 2 மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சமும் வங்கிகள் வழங்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications