திடீரென ஆஃப்லைன் சென்ற 2 ரேடார்கள்.. தமிழ்நாடு வானிலையை கணிப்பதில் பெரும் சிக்கல்.. நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரேடார்கள் தற்போது செயல் இழந்துள்ளது. இதனால் வானிலையை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இன்று முழுக்க தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் நவம்பர் 9,10 ஆம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ரேடார்கள்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரேடார்கள் தற்போது செயல் இழந்துள்ளது. காரைக்கால், சென்னையில் இருக்கும் வானிலை ஆய்வு மைய ரேடார்கள் செயல் இழந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ரேடார்கள் வேலை செய்யவில்லை. இதுதான் தமிழ்நாடு வானிலையை கணிக்க உதவும்.

கோளாறு
நிகழ்கால வானிலையை கணிக்க இந்த ரேடார்கள்தான் உதவும். இரண்டும் வேலை செய்யாத காரணத்தால் வானிலையை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ரேடார்கள் மூலம் வடமாவட்டங்களில் ஏற்படும் வானிலையை கணிக்க முடியும். இதை வைத்துதான் இப்போது சென்னை வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

சிக்கல்
சென்னை வானிலை இதை வைத்தே கணிக்கப்படுகிறது. ஆனால் காரைக்கால், சென்னையில் இருக்கும் வானிலை ஆய்வு மைய ரேடார்கள் செயல் இழந்த காரணத்தால் தற்போது புதுச்சேரி தொடங்கி தூத்துக்குடி வரை இருக்கும் பகுதிகள் எல்லாம் சிக்கலில் மாட்டி உள்ளது. இந்த பகுதிகளில் துல்லியமாக வானிலையை கணிக்க முடியாது.

துல்லியம் இல்லை
துல்லியமாக காற்று எங்கே செல்கிறது, தாழ்வு பகுதி எங்கே செல்கிறது, அதன் வலிமை போன்றவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்க முடியாது. செயற்கைகோள்கள் மூலம் வானிலை கணிப்புகளை மேற்கொண்டாலும் களத்தில் இருக்கும் ரேடார்கள்தான் துல்லியமான கணிப்புகளை வெளியிடும். ஆனால் இரண்டு முக்கிய ரேடார் ஆஃப்லைன் சென்றுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

என்ன செய்யும்
இதில் காரைக்கால் ரேடாரை சரி செய்ய வானிலை மைய அதிகாரிகளின் டீம் சென்றுள்ளது. இன்னொரு பக்கம் National Institute of Ocean Technology அமைப்பான என்ஐஓடி அமைப்பின் புதிய எக்ஸ் பேண்ட் ரேடார் நாளை செயல்பாட்டிற்கு வர உள்ளது. இது கடலோர மாவட்டங்களில் கணிப்புகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications