வேலூர், நெய்வேலியில் விமான நிலையங்கள் ரெடி.. விரைவில் பறக்கலாம்.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் 2 புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்து, அது தொடர்பான லைசென்ஸ் பெறும் பணிகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது என்றும், தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதன்மை பெற்று வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை மற்ற முன்னணி மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் பல முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் தொழில் வாய்ப்புகள் பெருகும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
விமான நிலையங்கள் அமைக்கப்பட்டால், அதன் மூலம் அந்தப் பகுதிகள் வளர்ச்சி பெறும், அது பல்வேறு வகைகளிலும் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், விமான நிலையங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் விமான நிலையங்களை அதிகரிப்பதற்கு, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹல் அளித்த பதிலில், "விமான சேவை மூலம் மண்டலங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த ஊர்களில் விமான நிலையங்களை அமைக்கும் பணியும், மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதில் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுவிட்டது. நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்து, அது தொடர்பான லைசென்ஸ்களைப் பெறும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த இரண்டு ஊர்களிலும் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.
ராமநாதபுரத்தில், விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டடப் பணிகள் தொடங்கும்.
இதுதவிர, தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி அவற்றை உடான் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விடவும் துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உடான் திட்டம் என்பது, வணிகம் சார்ந்த ஒரு திட்டமாகும். உடான் திட்டத்தின் கீழ் ஒரு மார்க்கத்தில் விமான சேவைதொடங்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் வரவேற்பு, கூடுதல் தேவை உள்ளிட்ட பல காரணிகளை வைத்து அவ்வப்போது அந்த விமான மார்க்கத்திற்கான ஏலம் நடைபெறும்.
விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் இத்தகைய விமான மார்க்கங்களை தொடர்ச்சியாக கண்காணித்து ஏலத்தில் பங்கேற்பார்கள். ஏலத்தின் முடிவில் விருப்பமுள்ள, தகுதியான நிறுவனத்திற்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications