தலைக்கு தில்ல பாத்தியா.. ஐபிஎஸ் ஆபிசர் பெயரில் பண மோசடி.. ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது
சென்னை: சென்னையில் திருநாவுக்கரசு ஐபிஎஸ் பெயரில் போலி முகநூல் கணக்குத் தொடங்கி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கைத் தொடங்கி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி, குறைந்த முதலீடு அதிக லாபம், இரட்டிப்பு வருமானம் மோசடி என இப்போதெல்லாம் டிசைன் டிசைனாக மோசடி கும்பலால் பணம் பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உஷார் ஐயா உஷாரு என்ற வடிவேலுவின் பேருந்து காமெடி போல, கொஞ்சம் மிஸ் ஆனாலும் சைபர் மோசடி கும்பல் வேலையைக் காண்பித்து விடுவார்கள். இந்நிலையில், சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி பெயரில் அவரது நண்பர்களிடம் ராஜஸ்தானைச் சேர்ந்த மோசடி கும்பல் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் பாதுகாப்பு பிரிவின் டிஐஜி திருநாவுக்கரசு. இவரது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கை மேசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் துவங்கியுள்ளனர். பின்னர், திருநாவுக்கரசின் நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இதையறிந்த திருநாவுக்கரசு சென்னை காவல் ஆணையகரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் திருநாவுக்கரசின் நட்புப் பட்டியலில் இருந்தவர்களில் சிலரைத் தேர்வு செய்து இந்த மோசடி கும்பல் பேசியுள்ளனர். அப்போது, தனது நண்பர் ஒருவர் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவில் பணியாற்றுகிறார். சென்னையில் இருந்து வெளியூருக்கு டிரான்ஸ்பராகி செல்வதால் அவரது வீட்டில் பயன்படுத்திய விலையுயர்ந்த பர்னிச்சர் பொருள்களை குறைந்த விலையில் தருகிறார் என்று கூறி பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த மோசடி கும்பல் பயன்படுத்திய ஐபி அட்ரஸை அடிப்படையாகக் கொண்டு, சைபர் குற்றப் பிரிவு போலீஸார் ராஜஸ்தானுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் பகுதியைச் சேர்ந்த ஹனிஃப்கான், வாஷித்கான் ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசராணை நடத்தபபட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் சோஷியல் மீடியாக்களில் போலி கணக்கைத் தொடங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications