அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்னாச்சு? ஒரே மாவட்டத்தை சேர்ந்த முக்கிய தலைகள் ஒரே நேரத்தில் அப்பல்லோவில்
சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைகள் ஒரே நேரத்தில் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொடர்ச்சியாக அரசு மற்றும் துறைசார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஒரு வாரம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விசுவநாதனும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறி வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற நத்தம் விஸ்வநாதன், மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று இரவு 9 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பியல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், ஒரே நேரத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications