நெல்லையில் சாதிவெறியாட்டத்துடன் எஸ்சி இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து அநாகரிகம்.. திருமாவளவன் ஆவேசம்
சென்னை: நெல்லை அருகே சாதிவெறியாட்டத்துடன் பட்டியல் இனத்தவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் செய்தவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் திங்கள்கிழமை இரவு 7.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பட்டியல் இனத்தைச் இளைஞர்கள் இருவரை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, சிறுநீர் கழித்ததாகவும், அவர்களது பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததாக ஆறு இளைஞர்கள் (மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள்) திருநெல்வேலி நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 19 வயதுடைய மாரியப்பன் மற்றும் 21 வயதாகும் மனோஜ் ஆகிய இரண்டு பேர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தை ஒரு சாதாரண திருட்டு சம்பவமாக சித்தரிக்க போலீசார் முயற்சிப்பதாகவும், எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் இருந்து பல விஷயங்களை தவிர்த்துவிட்டதாகவும் விசிகே நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அவர்களின் குற்றச்சாட்டுகளை திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதனிடையே திருநெல்வேலியில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பட்டமான சாதி வெறியுடன் கூடிய சம்பவம் என்றும், 20 வயது கூடஆகாத இந்த இளைஞர்கள் சாதி வன்மத்தில் இது போல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஸ்ரீராம் கண்டனம் தெரிவித்து , நடந்த விவரங்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.
அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது." இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications