உதயநிதி ஸ்டாலினால்.. தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்! சரியான நேரத்தில் அதிரடி மூவ்
சென்னை: உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி செய்ய மறுத்திருந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 14 முதல் 20 வரை பிரேசில் நாடடில், சாவ் பாலோவில் உலக செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச போட்டி நடைபெறுகிறது. 14-18 வயதுக்குட்பட்ட பிரிவில் தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், மத்திய அரசு இவர்களுக்கான நிதியை வழங்க முன்வரவில்லை.

அதாவது, "இந்த விளைாயட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் திட்டம் அரசாங்கத்தின் செலவில் அங்கீகரிக்கப்படவில்லை" என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறிவிட்டது. இதனால் இளைஞர்கள் இதில் பங்கேற்க அனுமதியும் வழங்கப்படவில்லை. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் செவித்திறன் மாற்றுத் திறனாளிகளான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷினி ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாவுலோ (Sao Paulo)-வில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது உலக செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுத்து, இந்திய விளையாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 5 பேரின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐந்து பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசால் வழங்கப்படும் என இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே ஐந்து பேரும் பிரேசில் சென்று போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் உத்தரவாதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications