உதயச்சந்திரனால் வீழ்ந்த உதயசூரியன்.. அரசு ஊழியர்களிடம் தீயாய் பரவும் மெசேஜ்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாக தான் வர முடிந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக சீனியர்கள் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். இந்த தோல்வியால் திமுக சோகமடைந்துள்ளது. திமுக தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனால் உதயசூரியன் தோல்வியடைந்தது என்று அரசு ஊழியர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடினர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக வெற்றி பெற்றது.

திமுக தோல்வி
தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். திமுக 73 தொகுதிகளுடன் இரண்டாமிடத்தையும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். இந்த தோல்வி திமுகவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல எக்ஸிட் போல் முடிவுகள், ஜோதிட கணிப்புகளில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. திமுக தோல்விக்கு தவெக காரணம் என்று கூறப்படுகிறது. அதனுடன் பல்வேறு காரணங்களும் உள்ளன. பல்வேறு காரணங்களால் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, விலை வாசி உயர்வு , போதை மருந்து புழக்கம் ஆகியவை அதிகளவு இருந்ததாக புகார் எழுந்தது.
உதயச்சந்திரன் காரணம்
மேலும் அதிகாரிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டதாக திமுக நிர்வாகிகளே குமுறி வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் திமுக அரசு அவர்களை மோசமாக கையாண்டதாக புகார் எழுந்தது. இதன் பின்னணியில் நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் இருந்ததாக அரசு ஊழியர்கள் புகார் கூறினார்கள்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பதற்கு உதயச்சந்திரன் முக்கியமான காரணமாக இருந்துள்ளார் என்று புகார் வைக்கிறார்கள். இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உதயச்சந்திரன் மீது மிகுந்த வருத்தத்திலும், கோபத்தில் உள்ளனர். உதயசூரியனை முடித்து கட்டிய உதயச்சந்திரன் என்று வாட்ஸ் அப்பில் அவரின் புகைப்படத்துடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications