இளைஞர்களே வாங்க.. அன்பகத்திலிந்து அன்பாக அழைத்த உதயநிதி! அடுத்த சில மணி நேரத்தில் “குட் நியூஸ்”
சென்னை: திமுக இளைஞரணியின் மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், "சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர்.
கழகப்பணியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறி அறிவிப்பு அறிக்கையையும் விண்ணப்ப படிவத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு
அந்த அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள 72 கழக மாவட்ட - மாநகரங்கள், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்கள் என கழகத்துக்கு அமைப்பு உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞர் அணிக்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும்
40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கவும். தற்போது மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளில் உள்ளவர்கள் மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை நகல் எடுத்து விண்ணப்பிக்கலாம்.

நகல் பெறுவது எப்படி?
மாவட்டக் கழகம், மாவட்ட அமைப்பாளர்களிடமிருந்தோ, அன்பகத்தில் இருந்தோ விண்ணப்ப நகலைப் பெற்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக, முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழின் நகல் இணைப்பது அவசியம். இதுவரை ஆற்றிய கழகப் பணிகள் குறித்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் அவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கழகத்திலோ, மாவட்ட அமைப்பாளரிடமோ டிசம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அன்பகத்திலும் வழங்கலாம்.

எப்போது நேர்காணல்?
தாமதமாக வரும் விண்ணப்பம் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அன்பகத்தில் நடைபெறும். நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு பிறகு வெளியிடப்படும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர் பதவி
இந்த அறிவிப்பை வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பதற்கான ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்ததை ஆளுநர் ஏற்றதை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications