ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போலவே டெல்லி டிராக்டர் பேரணியையும் வன்முறை களமாக்கிவிட்டனர் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணியின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு விவசாயி மரணம் அடைந்தார். டெல்லியையே போர்க்களமாக்கிய இந்த நிகழ்வுகள் தொடர்பான உதயநிதியின் ட்விட்டர் பதிவுகள்:

தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர்.

வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன.
ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. 'நானும் விவசாயி' என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications