அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டுக: பேரவையில் உதயநிதி கோரிக்கை
சென்னை : அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக , கடந்த சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்க சட்டம் கொண்டுவருவாம் என்று உறுதி அளித்தது.
இதுபற்றி சட்டசபையில் இன்று தனது முதல் பேச்சின் போது உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசினார். இதுபற்றி அவர் ட்விட்டரில் கூறும் போது, சட்டப்பேரவையில் எனது முதல் உரையின் போது நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்றும் நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
'நீட் தேர்வை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்'என எனது பேரவை உரையில் குறிப்பிட்டு பேசினேன். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்' என்று அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" இவ்வாறு கூறினார்,












Click it and Unblock the Notifications