இவர்களுக்கும் விளையாட்டா.. குள்ள மனிதர்களுக்கு உதவிய உதயநிதி! ஜெர்மனி உலக சாம்பியன்ஷிப் போறாங்கலாம்
சென்னை: ஜெர்மனியில் நடைபெற உள்ள குள்ள மனிதர்களுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள 3 தமிழ் வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
ஜெர்மனியின் கொலோனில் ஜெர்மன் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை 8வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு வீரர்களான புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் அழகப்பன், மதுரையை சேர்ந்த கணேசன் கருப்பையா மற்றும் மனோஜ் சிங்கராஜா ஆகிய மூவரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

ஆனால், இவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜெர்மனிக்கு செல்வது தொடங்கி, போட்டிக்கு தயாராவது, ஜெர்மனியில் தங்குவது உட்பட லட்சக்கணக்கான ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
நுழைவுக் கட்டணம், விமானச் கட்டணம், உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான தொகையாக தலா ரூ.2,49,200 என மூன்று பேருக்கும் மொத்தம் ரூ.7,47.600 க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜெர்மனியின் கொலோனில் ஜெர்மன் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் 30.07.2023 முதல் 05.08.2023 வரை நடைபெற உள்ள 8வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர்களான திரு. செல்வராஜ் அழகப்பன் (புதுக்கோட்டை), திரு. கணேசன் கருப்பையா (மதுரை) மற்றும் திரு. மனோஜ் சிங்கராஜா (மதுரை) ஆகிய மூவருக்கும். நுழைவுக் கட்டணம், விமானச் கட்டணம், உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான தொகையாக தலா ரூ.2,49,200/- என மூவருக்கும் மொத்த தொகை ரூ.7.47.600/- க்கான காசோலையினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (08.06.2023) பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.
மேலும், புது தில்லியில் 25.04.2023 முதல் 28.04.2023 வரை நடைபெற்ற 2வது தேசிய செரிபிரல் பால்சி (Cerebral palsy) தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 02.06.2023 முதல் 04.06.2023 வரை நடைபெற்ற 2வது தேசிய செரிப்ரல் பால்சி (Cerebral palsy) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட தடகள மற்றும் கால்பந்து வீரர்கள் 17 பேர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி. இ.ஆப., அவர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications