ஆம்புலன்சுக்கு வழி விட மாட்டீர்களா? அதிமுகவே ஒரு நாள் ஆம்புலன்ஸில் போகும்! இறங்கி அடித்த உதயநிதி
சென்னை: ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் அதிமுகவினர் தடுக்கும் நிலையில், விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் எனவும், அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமையும் ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் பல்வேறு புதிய வசதிகளுடன், 28.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த புதிய மருத்துவமனை தரை தளத்தில் 7 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் முதலுதவி சிகிச்சைப் பிரிவு, முதல் தளத்தில் வெளிநோயாளர் பிரிவு, மருந்தகம் மற்றும் இரத்த சேகரிப்பு பகுதி, இரண்டாம் தளத்தில் 15 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC), அறுவை அரங்கம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை மருத்துவமனை
சிறப்பு பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவு (SNCU) பேறுகால முன் மற்றும் பேறுகால பின் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தளத்தில் 22 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பிரிவு, நான்காம் தளத்தில் 27 படுக்கைகள் கொண்ட இரத்த வங்கி, இரத்த சுத்திகரிப்பு அலகு, ஐந்தாம் தளத்தில் 26 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைப் பிரிவு, பொது ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு, ஆறாம் தளத்தில் 13 படுக்கைகள் கொண்ட அறுவை அரங்கம் உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
மேலும், 110 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "120 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை சைதாப்பேட்டை மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். கல்வியும், சுகாதாரமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்வர் கூறுவார்.
திமுக அரசு
கலைஞர் ஆட்சியில் சுகாதாரத் துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்கள்தான் இன்று தமிழ்நாட்டைக் குறிப்பாக சென்னையை இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டல் என்று சொல்லும் அளவிற்குச் சொல்ல வைத்துள்ளது. மக்களுக்கு மருத்துவ சேவைகளை வீடு தேடிச் செல்ல வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய அரசுக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐநா சபையின் விருது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. சுகாதாரத் துறையில் இந்தியாவுக்குத் தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது. மருத்துவத்துறையில் என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் என்று நிரூபிக்கும் அளவிற்கு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் உள்ளார். மக்களைச் சந்திக்கிறார்.
ஆம்புலன்ஸ் பிரச்சனை
அவர், பொதுக் கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னவெல்லாம் தடங்கல்கள் செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விரைவில் அதிமுகவை ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications