எந்த நிலையில் அரசின் சிறப்புத் திட்டங்கள்? தாமதம் கூடாது! அதிகாரிகளை அலர்ட் செய்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: அரசின் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது, சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் நிலை எந்த நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுகிறது. இதன் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியரின் பசியைப் போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், இளைஞர் திறன் திருவிழாக்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியெல்லாம் விரிவான விளக்கம் கேட்டறிந்தார்.
மேலும் பூமாலை வணிக வளாகங்களின் செயல்பாடுகள், திறன் பயிற்சிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, திட்டங்களை திறம்பட செயல்படுத்திட உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் நிலை, குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அடைந்துள்ள முன்னேற்றம், இலக்கை விரைந்து எய்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவை இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications