பாஜகவிடமிருந்து கூட தப்பிக்கலாம்! ஆனால் முதல்வரிடமிருந்து தப்ப முடியாது! உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை: பாஜகவிடமிருந்து கூட எடப்பாடி பழனிசாமி தப்பிக்கலாம், ஆனால் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தப்ப முடியாது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஓடும் அரசு நகரப்பேருந்துகளுக்கு பெண்கள் தான் உரிமையாளர்கள் எனவும் உதயநிதி தெரிவித்தார்.

பட்ஜெட் விளக்கம்
தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி பாஜகவிடமிருந்து கூட தப்பிக்கலாம் ஆனால் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தப்ப முடியாது எனத் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையிலும் பாஜகவுக்கு அதிமுக முட்டுக்கொடுத்து ஊடகங்களில் பேசி வருவதாக விமர்சித்தார். திமுகவை பொறுத்தவரை எந்த மொழிக்கும் எதிரான கட்சி கிடையாது என்றும் ஆனால் குறிப்பிட்ட ஒரு மொழியை திணிப்பதை மட்டும் ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார். இந்தி தொடர்பாக அமித்ஷா பேசியதற்கு இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிலடி கொடுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

பெண்கள் உரிமையாளர்கள்
தமிழகத்தில் ஓடும் அரசு நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்ற சூழல் உள்ளதாகவும் இதனால் பெண்கள் தான் அரசு நகரப்பேருந்துகளின் உரிமையாளர்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டி வருவதாக அவர் கூறினார்.

நல்ல செய்தி
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் விரைவில் அது தொடர்பான நல்ல செய்தி நமக்கு கிடைக்கும் எனவும் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications