மகளிர் உரிமை தொகை.. பறந்து வந்த எஸ்எம்எஸ் .. திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வளவு நாட்களாக இந்த துறை சார்பாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தான் மக்களுக்கு உரிமை தொகை எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வந்தது. இப்போது ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் எஸ்எம்எஸ்கள் வருகின்றன. வீடியோவுமே உதயநிதி பெயரில் வந்துள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள கடந்த ஆண்டே 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்து, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பார்கள்.
அப்படி விண்ணப்பிக்கும் போது இந்த எண்ணிக்கை வரும் ஆண்டில் பெரிய அளவில் அதிகரிக்கும்.. எனவே அதற்கு ஏற்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து தற்போது 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தாராளமான மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கிவிட முடியும்.
அதுமட்டுமல்ல கூடுதலாக சுமார் 8 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையை அரசால் வழங்க முடியும். எனவே வரும் மாதத்தில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் மற்றும் புதிதாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகைக்கு இத்தனை நாட்களாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் தான் எஸ்எம்எஸ்கள் வந்தன. இப்போது முதல்முறையாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் வீடியோ உடன் எஸ்எம்எஸ் வந்துள்ளது. மகளிர் உரிமை தொகை நேற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறித்து எஸ்எம்எஸ் வந்தது. அதில், நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான தொகை ரூ.1000 உங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மாதந்தோறும் தொடரும். இத்தொகையினை அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்திப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை குறித்து மக்களுடன் பேசும் வீடியோவும் வந்திருக்கிறது. விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சிறப்பு திட்டங்கள் செயலாக்க அமைச்சராகவும் தொடர்கிறார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் என்பது முதல்வர் ஸ்டாலின் கைவசம் உள்ள துறையாகும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இந்த துறையின் கீழ் வரும்.. இந்த துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளதால், மகளிர் உரிமை தொகை எஸ்எம்எஸ் உதயநிதி பெயரில் வந்திருப்பதாக தெரிகிறது.















Click it and Unblock the Notifications